என்னை கவனிப்பவர்கள்

வருக!உங்கள் கருத்துக்களை தருக!.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்

Wednesday, May 22, 2013

சூது கவ்விய ஸ்ரீசாந்த், இல்லை! சீ! சாந்த்


அன்புள்ள ஸ்ரீசாந்த்!
    கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெற்று வருகிறாய். வாழ்த்து சொல்லக் கூடிய சாதனையையா செய்திருக்கிறாய்?  வேதனையுடன் வசைபாடக் கூடிய  சூதினை  அல்லவா செய்திருக்கிறாய்.!

   சூதாட்டம் தற்காலிகமாக வாழ்க்கையை வளப் படுத்தலாம். இறுதியில் நாசம் செய்து விட்டு அல்லவா நகர்ந்து போகும்!.பார்த்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான கண்கள் காண்பதெல்லாம் நிசம் என்று நம்பிக் கொண்டிருக்க மண் தூவுவது தெரியாமலேயே கண்ணில் மண்தூவும் உன்னைப் போன்றவர்களைப் பார்க்கும் போதெல்லாம், இப்படிப்பட்ட கிரிக்கெட்டையா ரசிக்கிறோம் என்று வெட்கமாகத்தான் இருக்கிறது.
   பணம் உன் கண்ணை மறைத்ததால் நீ எங்கள் கண்களை மறைக்க  முற்பட்டாயே! நியாம்தானா? அப்படி என்ன உனக்கு சோற்றுக்கே வழி இல்லையா? ஒரு முறை ஹர்பஜன் உன்னை அறைந்தார். அதற்கு பழி வாங்கவோ நீ கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில்  அறைந்தாய்.  உன் சுயநலத்துக்காக ஆட்டத்தையா அடமானம் வைப்பது? தடை விதிக்கப் பட்ட அசாருதீன் ஜடேஜா போன்றவர்களைக் கண்டும் உனக்கு அச்சம் ஏற்படவில்லையா?

   உன்னை நம்பி உன்னை ஒருவர் உன் திறமைக்காக ஏலம் எடுத்த பின் அவர்களுத் தெரியாமல் இன்னொருவருக்கு ஏன் ஏலம் போனாய்.  தொழில்நுட்பக் கண்கள் உன்னைக் கண்டறியும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ குற்றமற்றவன் என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கும்   உன் பெற்றோர்கள் இந்த செய்தியைக் கேட்டதும் ஈன்ற பொழுதினும் பெரிதுவந்திருப்பார்களா? உன் திறமையை வெளிப்படுத்தி  கூலி பெறுவது நேர்மையான ஆட்டம்.  திறமையை வெளிபடுத்தாமல் இருப்பதற்காக கூலி பெறுவது சூதாட்டம். மேட்ச் பிக்சிங் தானே செய்யக் கூடாது; ஸ்பாட் பிக்சிங் செய்தால் தவறு இல்லை என்று உன்னை யாரேனும் மனம் மாற்றி இருக்கலாம். அதற்கு நீ மயங்கிப் போனது உன்வாழ்க்கைக்கே வேட்டு வைத்து விட்டதே!. இது உன்னுடைய குற்றம் மட்டுமல்ல. விளையாட்டு கோடிகள் புழங்கும் வியாபாரமாக மாறியதும் ஒரு காரணமே. பொருட்களைப்  போல வீரர்களை விற்பதும் வாங்குவது ஏலம் போடுவதுமே  சூதாட்டம் போலத்தானே!

   உன்னைப் போல் இன்னும் பலர் இருக்கலாம்.நீ மாட்டிக் கொண்டாய் அவ்வளவுதான்! மாட்டிக் கொள்ளாதவரை அனைவரும் உத்தமர்களே! சச்சினைப் பார்! திராவிடைப் பார்த்து கற்றுக் கொள்! என்று சொல்லக்கூட தயக்கமாகத்தான் இருக்கிறது. எந்த நேரத்தில் எந்த உண்மை வெளியாகுமா தெரியாது. இன்னும் பல வீரர்களின் அந்நியன் முகங்கள் வெளிப்படலாம்.

   உனக்குத் தெரியும்! தெருவோரா கிரிக்கேட்டிலேயே .பால் மேட்ச் , பெட் மேட்ச் நடக்கும். அதை சூதாட்டத்தின் தொடக்கம்  என்று அறிந்திருக்க முடியாது. 

    இதுவும் நடப்பதுதான். சில நேரங்களில் ஒரு அணியில் ஆட்கள் குறைவாக இருக்கும்போது அதிகமாக உள்ள எதிர் அணியினரின் கூடுதலாக வந்திருக்கும்  ஒரு சிலரை தன் அணியில் விளையாட அழைப்பார்கள். அவர்கள் கூட தான் ஆடும் அணிக்காக உண்மையாகத்தான் விளையாடுவார்கள். தன் சொந்த அணி வெல்ல வேண்டும் என்பதற்காக தான் சொந்த அணி தோல்வி பெறும் நிலையில் இருந்தாலும், தான் விளையாடும் அணியில்  காட்ச விடுவது,  ரன் அவுட் ஆவது போன்ற எந்த செயல்களையும்  செய்ய மாட்டார்கள். தன் அணியில் ஆடும்போது ஏராளமான காட்சுகளை விடுவானே! எதிரணிக்கு ஆடும்போது மட்டும் இப்படிப் சரியாக பிடித்து விடுகிறானே என்று அங்கலாய்த்துக் கொள்வதும் நடப்பதுண்டு. சிறுவர்களாய் இருக்கும்போது இருந்த அந்த நேர்மை பிற்காலத்தில் பணத்துக்காக  மாறிவிடும் போலிருக்கிறது.  உனக்கும் அப்படித்தான் நிகழ்ந்திருக்கும்.


  11 முட்டாள்கள் ஆடுகிறார்கள் 11000 முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்றார் பெர்னாட் ஷா. உண்மையில் பார்க்கும் பல ஆயிரம் பேர்கள்தான் மட்டும்தான் முட்டாள்கள் என்பதை உன்னைப் போன்றவர்கள் எங்களுக்கு உணர்த்தி இருக்கிறீர்கள் . உங்களை  பார்க்கும் பிஞ்சு மனங்களிலும் நஞ்சை அல்லவா  விதைக்கிறீர்கள்.

   இவற்றையெல்லாம்  தவிர்க்க அரசாங்கமே சூதாட்டத்தை  அனுமதிக்கலாம்; அரசுக்கு வருமானம் கிடைக்கும்  என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். சூதாட்டம் தவறு எனும்போது அரசாங்கம் அனுமதித்தால் மட்டும் அது எப்படி சரியாகும் என்று தெரியவில்லை. 

   நாம் மாட்டிக்கொள்ள மாட்டோம் என்ற அசட்டு தைரியமும் மாட்டிக் கொண்டாலும் சட்டத்தில் ஒட்டைகளா இல்லை. வெளிவருவதற்கு என்ற எண்ணமும் இத் தவறுகளை செய்யத் உன்னை தூண்டி இருக்கலாம்.  மக்களின் மறதியும் அலட்சியமும் தானே ஊழலின் ஊற்று.

   நீ மீண்டும் வந்து ஆடினாலும் காலரியில் நின்று கைதட்ட நாங்கள் இருக்கும்போது உங்களைப் போன்றவர்களுக்கு என்ன கவலை?

  நேரம், மின்சாரம், மக்களின் நம்பிக்கை இவற்றை வீணாக்கும்  ஐபிஎல் கூடிய விரைவில் கிரிக்கெட்டை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.கோபமும் வருத்தமும் ஏற்படத்தான் செய்கிறது என்ன செய்ய?

ஸ்ரீசாந்த் உன்னை  சீ!....சாந்த்  என்று அழைக்க வைத்து விட்டாயே!
                        
              கிரிக்கெட்டெனும்ஆட்டத்தை சூது கவ்வ
                    கிறுக்கரென ரசிகர்களை நினைத்து விட்டாய் 
              சருக்கிவிட்டாய்  நேர்மைஎனும் பாதையி லிருந்து 
                  சஞ்சலமே சங்கடமோ துளியும் இன்றி; 
              வெறுக்கட்டும் கிரிகெட்டை இனிமேல் மக்கள்
                    விலைபோனாய் பணத்துக்கு இன்று நீயே 
              சிரிக்கட்டும் உலகம்இனி உன்னைப் பார்த்து 
                     சிந்திப்பாய் எதிர்காலம் கேள்விக் குறியே!
    
                                              இப்படிக்கு  
                   இனிமேல்  கிரிக்கெட்டை வெறுக்க இருக்கும் ரசிகர்கள் 


*****************************************************************************************

Monday, May 20, 2013

இப்படியும் ஒரு கிராமம்!இப்படியும் ஒரு தலைவர்!

   நம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்திக் காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக்  கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ  வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில் மின்னிக் கொண்டிருக்கின்றனர்

  எங்கும் ஊழல் எதிலும் ஊழல் தினந்தோறும் பத்திரிகையைத் திறந்தால் ஊழல் செய்திகளே பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்  படுபவர்கள் தங்கள் பதவிக் காலத்திற்குள் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள்.பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை உண்மையான மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் கிராமங்களோ வறுமை,வறட்சி,நோய்கள் அறியாமை இவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நாளுக்கு நாள் கிராம மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தை வளப்படுத்த வேண்டியவர்களோ தங்களை மட்டும் வளப்படுத்திக் கொள்கிறார்கள்.

   இப்படி பட்டவர்களுக்கு மத்தியிலே இப்படி ஒரு மனிதர் எப்படி உருவானார்?. எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்வதற்கு பதிலாக அரசு திட்டங்களை பயன்படுத்திகொள்வதோடு மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுயசார்பு, சுயகட்டுப்பாடு சுயஆட்சி முறையை பின்பற்றி  ஹிவாரே பசார் என்ற தனது கிராமத்தை இந்தியாவின் மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டி இருக்கிறார் பொப்பட் ராவ் பாகுஜி பவார். இது ஒரு நாளில் நிகழ்ந்த மாயாஜாலமல்ல. அயராத முயற்சியும் தளராத தன்னபிக்கையுமே இந்த  இந்த கிராமத்தின் உயர்வுக்கு காரணம். கிராம மக்கள் இவர் மீது அபார நம்பிக்கை வைத்து உழைத்தனர்: இன்று உயர்ந்தனர்,

  அப்படி என்னதான் செய்தார் இவர்? வியக்கும் அளவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது?
  மகாராஷ்டிரா  மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில் சஹ்யாத்ரி மலைப் பகுதிக்கு அருகிள் உள்ள மழை மறைவுப் பிரதேச கிராமங்களில் ஒன்று ஹிவாரே பசார். இந்த கிராமத்து மக்களின் சராசரி வருமானம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகம்.முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்து தடைக் கற்களையும் தகர்த்தெறிந்து  கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று முன் மாதிரி கிராமமாக திகழவைத்த சாதனையாளரின் வெற்றிக் கதை இதோ 

இதோ இந்த புகைப்படங்களை பாருங்கள்

  சிறந்த தலைவர் உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிற பொப்பட்ராவ் பாகுஜி பவார் அகமத் நகரில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார். வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும் வணிக எண்ணம் தோன்றவில்லை. மகாத்மா காந்தி,வினோபாபாவே,அண்ணா ஹசாரே,பாபா ஆம்டே கொள்கைகளால் கவர்ப்பட்ட பொப்பட் ராவ் மோசமான நிலையில் இருந்த தன கிராமத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். 1990 இல் மக்களால் ஒரு மனதாக கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அன்று முதல்   ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்கத் தொடங்கினார்.

  தனது கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பஞ்சசூத்ரம் என்ற ஐந்து வழிமுறைகளை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார்
  1. ஷ்ரம்தான்-அனைவரும் தனது உழைப்பை கிராமத்திற்காக  இலவசமாக தருவது
  2. கிராமத்தில் ஆடு மாடுகள்  நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தாவரங்களை மேய்ச்சலை தடுப்பது
  3. மரங்கள் வெட்டுவதை முழுமையாக தடை செய்வது
  4. கிராமத்தில் மது விலக்கை கடை பிடிப்பது
  5.  குடும்ப கட்டுப்பாடு 
    முதலில் சிரமப்பட்டாலும் பின்னர் இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல் பட்டனர்.கிராம மக்கள். ஏரி குளங்கள், கால்வாய்களை சீரமைத்தல்,மரம் நடுதல் போன்றவற்றிக்கு கூலி இன்றி தங்கள் உழைப்பை தந்தனர். கண்டபடி புல்வெளிகளையும் தாவரங்களையும் ஆடுகள் மேய்வதை கட்டுப்[ படுத்தினர். 94-95 இல் 200 டன்னாக இருந்த புல் உற்பத்தி 2001-2002 இல் 5000 டன்னாக உயர்ந்தது  மரம் வெட்டுவதை முழுமையாக தடை செய்திருந்ததால் மரங்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்தது. மதுவிலக்கை கண்டிப்பாக கடை பிடித்ததால் மனித வளத்தின் ஆற்றல் உய்ரந்ததோடு குற்றசெயல்கள் முற்றிலும்  ஒழிந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. வறுமை ஒழியவும்  தன்னிறைவு அடையவும் இது உதவியது. கிராமத்தை சேராதவர்களுக்கு நிலங்கள் விற்பது தடுக்கப்பட்டது. இதனால் வணிக நோக்கம் முற்றிலுமாக தவிர்க்கப் பட்டது.

  நீர் வளத்தை அதிகப்படுத்த திட்டம் தீட்டப் பட்டு முறையாக செயல்படுத்தப் பட்டது. அதிக நீர் உறிஞ்சும் பயிர்களான கரும்பு போன்றவை பயிர் செய்தல் தவிர்க்கப் பட்டது. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கண்டபடி நீர்உறிஞ்சி பயன்படுத்துவது தடை செய்யப் பட்டது. 1995 முதல் 2005 வரை நிலத்தடி நீர் சேகரித்தல்,மழைநீரை தேக்கி வைத்தல் போன்றவற்றை மக்கள் பங்கேற்புடன்   திட்டமிட்டு செயல் படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்தது 70 -80 அடியில் இருந்த நீர்மட்டம் 20-25 அடியாக அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 300 லிட்டரில் இருந்து 3000 லிட்டராக உயர்ந்துள்ளதாம்.தங்கள் கிராமத்தில் தயாரிக்கப் படும்  பால் பொருட்களுக்கென்று தனி ட்ரேட் மார்க் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது.
 
  பெரிய அளவில் தொழில் நுட்பங்களோ  முதலீடோ இல்லாமல் கிடைப்பதை வைத்து சுய உழைப்பு,கூட்டுறவு,கட்டுப்பாடு,ஒற்றுமை  இவற்றின் மூலமே முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து இந்த கிராமம். வேலை வாய்ப்பு கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகள் எல்லாம் இங்கேயே கிடைத்ததால்  கிராமத்தை விட்டு பிழைக்க சென்ற  குடும்பங்கள் மீண்டும் ஹிவாரே பஜாருக்கே திரும்பி விட்டார்களாம். அருகிலுள்ள கிராமங்கள் ஹிவாரே பஜாரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தன.

   இது போன்று இன்னும் சில கிராமங்கள் இருக்கக் கூடும். நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை  இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும்.

  ஒரு கூட்டு முயற்சியால்  சிகரத்தை எட்டியுள்ளது என்றாலும் சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி  வழிகாட்டிய  பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர்.
  ஒரு நல்லதலைவர் இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம். ஹிவாரே பஜார் கிராமத்துக்கு ராவ் பாகுஜி பவார் என்ற சிற்பி கிடைத்தார்.
   நாட்டுக்கு இப்படி ஒருவர் கிடைப்பாரா? கிடைத்தாலும் விடுவார்களா? 

*****************************************************************************************************************
கொசுறு: இந்த கிராமத்துக்கென்று வலைப்பக்கமும் உண்டு 
அதன் முகவரி


Saturday, May 18, 2013

இந்த ரகசியம் தெரியுமா?

 

இரகசியம் 

அது எப்படி?
உன் முகம் மட்டும் 
நிலவு போல்!

நீ 
மஞ்சளுக்கு பதிலாக 
நிலவைப் 
பயன் படுத்துகிறாயோ!

ஒ!
இப்போதல்லவா தெரிகிறது 
நிலவு தேய்வதன் 
ரகசியம்!

********************************************************************************
   இதெல்லாம் ஒரு கவிதையான்னு கேக்கப் படாது. பதிவு எழுதி ஒருவாரம் ஆயிடுச்சா.  எப்பவோ எழுதினத அவசரத்துக்கு போட்டுட்டேன். நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க.  எப்படி பட்டதையும் சகிச்சுக்குவீங்க!
எதுக்கும் பீ கேர்ஃபுல்!
நான் என்னை சொன்னேன்!
*******************************

கொசுறு: அப்ப நிலவு எதுக்கு வளரதுன்னு கேக்கறீங்களா? இப்படியெல்லாம் கேட்டா  அந்த ரகசியத்தையும் சொல்லிடுவேன். ஹிஹி 

Wednesday, May 15, 2013

சாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து

    தமிழனின் தோலோடு தோலாக ஓட்டிக்கொண்டிருக்கிறது  சாதிச் சட்டை .அது கழற்றப் படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன சாதிக் கட்சிகள். பொதுநலப் போர்வையில் சுய நல அரசியலுக்காக சாதீயை அணைக்க விடாமல் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது சுய நல அரசியல்.  மறக்க விரும்பினாலும் அது முடியாது என்பதை  உரைத்துக் கொண்டிருக்கின்றன மரக்காணம் வன்முறைகள் 

  இந்த சம்பவங்களை நினைத்து மனம் வெதும்பிக் கொண்டிருக்கையில் சமீபத்தில் படித்த கவிப் பேரரசு வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும்  மழை கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் தீ அணையட்டும் என்ற கவிதை நினைவுக்கு வந்தது. இந்தக் கவிதைதான் சாதிக்கு எதிரான இறுதிக் கவிதையாக இருக்கவேண்டும் என்று விரும்புவதாகக் கூறி தொடங்குகிறார்.

இதோ அந்தக் கவிதை
சாதீ

                  தெற்கே வடக்கே  சாதிகள் மூட்டும்
                     தீயே பரவாதே -பழங்
                  கற்காலத்து பாம்பே எங்கள்
                     காலைச் சுற்றாதே

                  மண்பானைகளும் மண்பானைகளும்
                     மல்லுக்கு நிற்பதுவோ -இங்கே
                  கண்ணீர்த் துளிகளுள் கண்ணீர்த் துளிகளும்
                     கைகள் கலப்பதுவோ

                  முன்னூறாண்டை முன்னுக் கிழுக்குது
                      முரட்டு விஞ்ஞானம்-நாமோ
                  முன்னூறாண்டு பின்னே செல்வது
                      முழுக்க அஞ்ஞானம்

                  அந்நியரோடு சண்டை இட்டது
                     ஆறோ ஏழோதான்-சொந்த
                  மன்னவரோடுசண்டையிட்டது
                     மணலினும் அதிகம்தான்

                  செயற்கை மனிதன் செவ்வாயோடு
                      சிற்றில் ஆடுகையில் -இங்கே
                  இயற்கை மனிதர் சாதி சண்டையில்
                      இடுப்பு முறிவதுவோ

                  .நீண்ட நாள் முன் யாரோ விதைத்த
                      நெருப்பின் மிச்சத்தில்-மண்ணை 
                  ஆண்ட பரம்பரை இன்றுவரைக்கும் 
                      அழிந்து கருகுவதோ?

                   புதைந்த தமிழின் சங்கம் மூன்றை 
                      புதுக்க எண்ணாமல்-நம்மை 
                   புதைக்கும் சாதி சங்கத்துக்குள் 
                      புதைந்து போவீரோ?

                   வறுமை  ஏழ்மை பேதமைக் கெதிராய்
                       வாளை எடுக்காமல் -நாம் 
                   ஒருவரை ஒருவர் எரித்து மகிழும்
                       உற்சவம் நடத்துவதோ?

                    புத்தகம் தந்து கல்விச் சாலை 
                       போகும் சிறுபிள்ளை-கையில் 
                    கத்திகள் தந்து சாதிக் களத்தில் 
                       கருகச் செய்வீரோ?

                    மனிதன் எனும் நிஜத்தை நீங்கள் 
                        மறந்து தொலைத்து விட்டு-சாதி 
                    சனியன்  என்னும் கற்பனைக்காக 
                         சமர்கள் புரிகுவதோ?

                    ஆயு தங்களை  கட்டும் கையால் 
                         அணைகள் கட்டுங்கள்-அந்த 
                    ஆயதங்களைஉருகி உருக்கி 
                         ஆலைகள் எழுப்புங்கள் 

                     சிலைகள் எடுக்கும் செலவில் நீங்கள் 
                         சிறகுகள் வாங்குங்கள்-வீணே 
                     தரையில் சிதறும் ரத்தம் போதும் 
                         தானம் புரியுங்கள் 

                     முன்னே வள்ளுவன் பின்னே பாரதி 
                         முழங்கினர் ஊருக்கு- அட 
                     இன்னும் நீங்கள் திருந்தாவிட்டால் 
                         இலக்கியம் ஏதுக்கு?


***********************************************************************************************************************

Thursday, May 9, 2013

+2 தேர்வு முடிவுகள் 2013 -பரபரப்பான நாள்

பெற்றோர்களே!,
   இன்னும் சிறிது நேரத்தில் +2 தேர்வு முடிவுகள்  வெளியாக உள்ளது. முடிவுகளை கீழ்க்கண்ட இணைய தளங்களில் காணலாம். உங்கள் குடும்பத்தினர் உறவினர் நண்பர்களின் +2 படிக்கும்  பிள்ளைகளின்  தேர்வு முடிவுகளை பார்க்க நீங்களும் உதவலாம் 

இதோ முடிவுகள் வெளியாக உள்ள இணைய தளங்களின் இணைப்புகள் 
கிளிக் செய்யுங்கள் முடிவுகளைப் பாருங்கள் 
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
   மாணவர்கள் என்ன மதிப்பெண் கிடைக்குமோ என்று பரபரப்புடன் இணையத்தின் முன் காத்துக் கொண்டிருப்பார்கள். பெற்றோர்களோ நம் மகன்/மகள் மற்றவர்களை அதிக மதிப்பெண் பெற வேண்டுமே என்று டென்ஷனுடன் இருப்பார்கள். +2 எழுதிய மாணவர்களின் பரபரப்புடனும்  அமைதியின்றியும் காணப்படுவார்கள்.   +2 மதிப்பெண் குறைந்து விட்டால் வாழ்க்கையே தொலைந்து விட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தி குழந்தைகளை அழுத்தத்திற்கு ஆளாக்கி விடுவார்கள். அதுவும் நடுத்தர குடும்பப்  பெற்றோர்கள்கிண்டி அண்ணா பலகலைக் கழகத்தில் படித்தால்தான் ஜென்ம சாபல்யம் அடையமுடியும் என்பதுபோலவும் வாழ்க்கையில் நன்கு செட்டில் ஆக முடியும்  என்பது போல   தோற்றத்தை  உருவாக்கி மார்க் குறைஞ்சுபோச்சுன்னா அவ்வளவுதான் என்று குழந்தைகளையும் மிரட்டுவார்கள்.
   ஆனால் +2 மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பதில்லை என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். ஒருவேளை  பிள்ளைகள் குறைவாக மதிப்பெண் பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ திட்டவோ அடிக்கவோ செய்யாதீர்கள்.
   நேற்று முக நூலில் பார்த்தேன். மதிப்பெண் வருவதற்கு முன்பே குறைவாகத்தான் இருக்கும் என்று ஒருமாணவன் தற்கொலை செய்து கொண்டானாம்.
இவையெல்லாம் தவிர்க்கப் படவேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே மதிப்பை தருபவை அல்ல. அதையும் தண்டி வாழ்வில் சாதிக்க ஆயிரம் வழி உண்டு.
மாணவர்களுக்கு  வாழ்த்துக்கள்

**************************************************************************************************