Followers

Tuesday, May 29, 2012

கர்நாடகாவுக்கு காவிரியின் கண்டனக் குரல்

    நேற்று  டில்லியில் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர  கர்நாடகா மறுத்து விட்டது.
    தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவின் அராஜகப் போக்கை கண்டு மனம் நொந்த காவிரித்தாயின் கண்டனக் கவிதை குரல் 


        கர்நாடகாவுக்கு காவிரித் தாயின் 
                கண்டனக்  குரல் 


              பஞ்சத்தைப் போக்குகின்ற பயிர்கள் எல்லாம் 
                  பசுமைதான் இழந்திருக்கும் காட்சி பாரீர்!
              நெஞ்சத்தை  கல்லாக்கி நேர்மை மறந்தீர்
                  நடுவர்கள் சொல்லி வைத்த தீர்ப்பை மறுத்தீர்!
              கொஞ்சம் தண்ணீர் கொடு என்று கேட்டபோதும் 
                  கோரிக்கை கேளாமல் செவிடாய் நின்றீர்
              அஞ்சாத தமிழர்கள் அகங்களில் எல்லாம் 
                  ஆத்திரத்தை மூட்டிவிட்ட செயலைச் செய்தீர்!

              தங்கத்தை விளைவிக்கும் ஊரில் இருந்தும்
                  தரங்கெட்ட செயல்களிலே இறங்கலாமா?
              பொங்கி வரும் என்னைநீர் சட்டம் போட்டு 
                  போகாமல் செய்திடுதல் முறையே தானா?
              எங்கெங்கும் பாய்ந்திடவே எனக்குரிமை உண்டு 
                  என்பதனை அறிந்திடுவீர் கொஞ்சம் இன்றே!
              தங்குதடை உடைத்திட நான் நினைத்துவிட்டால் 
                  தடைபோட்டுப் பயனில்லை அறிவாய் நன்றே!

              காவிரித்தாய்  கன்னடர்க்கே சொந்தம் என்று 
                   கயவர்கள் ஒன்றுகூடி கூட்டம் போட்டு 
              கைவிரித்து  நீரில்லை என்றே  சொன்னீர்!
                   போதவில்லை எங்களுக்கு; பொய்யும் சொன்னீர்.
              பைவிரித்து பணம் தேட  பண்பாடிழந்து 
                   பைந்தமிழர் வாழ்வினையே பதற  வைத்தீர் 
              கைவிட்டுப்  போன தந்த  உரிமைபெறவே
                   நதிநீரை தேசியமாய் என்று செய்வீர்?

              ஒருபிள்ளை தாகத்தில் தவித்து நிற்க 
                   தண்ணீரை மறைத்து வைத்து  தரமறுத்து
              மறு பிள்ளை விளையாடும் ஆட்டம் ரசித்து 
                  மகிழ்வோடு வாழ்வேன் நான் என்றா நினைத்தீர்?   
              சிறுபிள்ளை விளையாட்டாய் எண்ணி விடாதீர் !
                  சிறுபுத்தி கண்டிக்க மறந்தேன்; அதனால் 
              மறுப்பில்லை  தாய்க்கென்று  நினைந்து விடாதீர்?
                  மவுனமாய் அழுகின்றேன் மறந்துவிடாதீர்.

Sunday, May 27, 2012

வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3

வேலை தேடும் வடிவேலு - பகுதி 1
வேலை தேடும் வடிவேலு - பகுதி 2 -விடை
      வடிவேலுக்கு வேலை கிடைத்ததா? பகுதி 3

  வேலை தேடிச் சென்றபோது கேட்கப்பட்ட புதிர்கேள்விக்கு எப்படியோ நித்தியின்   அருள்வாக்கை (உளறலை)  முடிச்சு போட்டு கண்டுபிடித்த 
விடையை சொல்லி வேலை பெறுவதற்காக மகிழ்ச்சியுடன் நண்பர்களுடன் புறப்பட்டார் வடிவேலு. 

"அண்ணே வேலை கிடைச்சதும் எங்களுக்கு ஃ பைவ்  ஸ்டார் ஓட்டல்ல 
பார்ட்டி குடுக்கனும்ணே."

"அதுக்கென்ன குடுத்துட்டா போச்சு"  
நண்பர்கள்  மகிழ்ச்சியுடன் வடிவேலுவை தூக்கிக் கொண்டு சென்றனர்.

"நான் உள்ள போயி அப்பாயின்ட்மென்ட் ஆர்டரோட வரேன்.வெளிய இருங்க."
 உள்ளே வரவேற்பு பலமாக இருந்தது'
  "வாய்யா!. விடய கண்டு பிடிச்சிட்டயா. நீ கண்டுபிடிச்சிருப்ப. உனக்கேத்த வேலையாச்சே!"

   "கண்டுபிடிச்சிட்டேன் சார், வேற யாரும் வரலயே?
நீங்க சொன்ன கணக்கு
உன்கிட்ட நூறு ரூபாய் இருக்கு. நூறு ரூபாய பிரிச்சி ஏழு பொட்டலத்தில கட்டி வைக்கணும். அப்படி கட்டி முடிச்சதும் ஒரு ரூபாயிலிருந்து நூறு ரூபா வரை எவ்வளவு  கேட்டாலும் பொட்டலமாகத்தான் எடுத்து குடுக்கனும். அப்படி குடுக்கனும்னா ஒவ்வரு பொட்டலத்திலும் எவ்வளவு காசு வைக்கணும்?. ஒரு பொட்டலத்துக்கு மேலயும் குடுக்கலாம். ஏழு பொட்டலமும் சேத்தும் குடுக்கலாம். எந்தக் காரணத்தை கொண்டும் பொட்டலம் கட்டிமுடிச்சதும் அதை பிரிக்ககூடாது.
அதுக்கு  விடை:
ஒவ்வொரு பொட்டலத்திலயும்  1, 2, 4, 8, 16, 32 ,37 (இதுதான் விடை) ரூபா இருக்கற மாதிரி கட்டி வச்சா எத்தனை ரூபா கேட்டாலும் பொட்டலங்கள் பிரிக்காம எடுத்துக் கொடுக்கலாம்

"சூப்பர். சரியான விடைதான் எப்படி கண்டு பிடிச்ச?"

"எப்படி கண்டு பிடிச்சேக்கேங்கறது முக்கியம் இல்ல. கண்டுபிடிச்சனா? அதுதான் முக்கியம்."

"என்ன புத்திசாலித்தனமா பேசற.உனக்கு வேல கொடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். இன்னிக்கே ஜாயின் பண்ணலாம்." 

  "ரொம்ப சந்தோஷம் சார், நீங்க சொன்னபடி டெய்லி பேட்டா, யூனிபார்ம் இதெல்லாம் குடுப்பீங்களா?

   "அதுல என்ன சந்தேகம்?. யாருப்பா அங்க ஒரு யூனிபார்ம் ஒண்ணு எடுத்துட்டு வாங்க!  

    "புதுசா  ஓபன் பண்ணி இருக்கிற நங்கநல்லூர் ப்ராஞ்சை நீதான். பாத்துக்கணும். காலையில கம்பனி பஸ் வரும். அதுல வசதியா போகலாம். ஈவினிங்  உன்னை பிக் அப் பண்ணவும் பஸ் வந்திரும். பெட்ரோல் டீசல் விலை ஏறினாலும் நம்ம பஸ் நிக்காது...."
சொல்லிக்கொண்டிருந்தபோதே யூனிஃபார்ம் வந்தது.
    அதை வடிவேலுவிடம் நீட்ட அதைப் பார்த்த வடிவேலு அதிர்ச்சி அடைந்தார்!

  "என்ன சார்! கிழிஞ்சிபோன பேன்ட், சட்டையை குடுக்கிறீங்க.இதுவா 
யூனிஃபார்ம்? பிச்சகாரன் போடற துணி மாதிரியே இருக்கே! நான் என்ன பிச்ச எடுக்கவா போறேன்?"

   "ஆமாம் மிஸ்டர் வடிவேலு உங்களுக்கு நாங்க குடுக்கிற வேலையே பிச்ச எடுக்கற வேலைதான். அதுக்கு இந்த யூனிஃபார்ம்தான் கெளரவமா இருக்கும்"

   "அடப் பாவிங்களா நீங்க சொன்ன யூனிஃபார்ம் இதுதானா? இத முன்னாடியே சொல்லக்கூடாதா? இந்த  வேலைக்கு கணக்க அறிவு வேற  ரொம்ப முக்கியம்னு சொன்னீங்களேடா!"

   "தட்டுல விழற சில்லறைய கரெக்டா எண்ணி பொட்டலம் கட்டி வக்கனுமே. அதுக்கு கணக்கு தெரிய வேணாமா?"

   "நான் ஏதோ காஷியர் வேலன்னு நினச்சனே? அதுக்காக ஒரு புதிர் கணக்கு வேற கேட்டு என்ன நாற அடிச்சிட்டேங்களேடா.அதுக்கு விடை எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கண்டுபிச்சேன் தெரியுமா? கலக்டர் வேலைக்குக் கூட அந்த மாதிரி கஷ்டமான கணக்கு கேக்க மாட்டாங்களே? 
  "இதோ பார் இதுவும் கலெக்டர் வேலைதான். கலக்சன் பண்ணறங்களுக்கு என்ன பேரு? கலக்டர்தானே? நூறு  நூறா பிரிக்க தெரிஞ்சாதானே வேல ஈசியா முடியும்.?

  "டேய் எதுக்கும் ஒரு அளவு இல்லையாடா? சரவணா ஸ்டோர், தங்கமாளிகை,போதிஸ்,ஜெயச்சந்திரன், இவங்களெல்லாம் உங்கள நம்பி இருக்கற மாதிரியே ஒரு டூப் விட்டேங்களே? அதை உண்மைன்னு நினைச்சிட்டேனே?
"அது டூப் இல்ல உண்மைதான்! அவங்க தினமும் இங்க வந்து அவங்க கடைக்கு  தேவையான சில்லறைய வாங்கிட்டு போவாங்க. நாங்க சில்லறை குடுக்கலன்னா கடைய நடத்துறது கஷ்டம் தெரியுமா உனக்கு? 
    அவங்க கேக்கறப்ப ஒண்ணு ஒண்ணா எண்ணிக்கிட்டா இருக்க முடியும்?. கேட்டவுடன் டக் டக்குன்னு பொட்டலம் பொட்டலமா சில்லறைய கரெக்டா எடுத்து குடுக்கணும். அதுக்குதான் கணக்கு நல்லா தெரிஞ்ச  ஆளுக்குத்தான் வேல குடுப்போம்."
   
  " நாந்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டனா? ஏண்டா.. பிச்ச எடுக்கறத கம்பனி மாதிரி வச்சு நடத்தறீங்கலேடா?.இந்தக் கேவலமான வேலைக்காடா நான் இவ்வளோ கஷ்டப்பட்டேன்.அவ்வ்வ்வ்வ்..... "

  "டேய் நம்ம தொழில இவன் கேவலமா பேசிட்டான். எல்லாம் ஓடிவாங்க...... இவனை சும்மா விடக்கூடாது. "

   அங்கு இருப்பவர்கள் வடிவேலுவைத் தாக்க ஓடிவர வடிவேலு தப்பிப்பதற்காக  தலை தெறிக்க வெளியே ஓட்டுகிறார்.

  வெளியே காத்திருந்த அவரது நண்பர்கள் "என்னண்ணே! ஏன் ஓடறீங்க நில்லுங்கண்ணே! நில்லுங்கண்ணே!' என்று பின்னாலே ஓடிவர

   "அடேய்! எல்லாம் உங்களாளதாண்டா.... உங்களை அப்புறமா கவனிச்சிக்கிறேன்... இப்போதைக்கு உசுருதாண்டா... முக்கியம்........"

************************************************************************************************


Thursday, May 24, 2012

பதிவர் சந்திப்பில் அறிந்த 'பயன்படா மரங்கள்'

 
  பதிவர் சந்திப்பு அறிமுகப் படுத்திய அற்புத மனிதர்  யோகாநாதன். மரங்களுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்துக்  கொண்டவர்.பக்கத்து வீட்டு மரத்தின் கிளை நம் வீட்டை எட்டிப் பார்த்தாலே சண்டையிட்டு அதை வெட்டும் வரை ஓயாத மனிதர்கள்தான் இங்கே அதிகம். 
  ஆனால்  மரங்களை வெட்டினால் இவர் மனம் துடிக்கும். இவர் சொல்வதைக் கேட்டால் உலகம் பிழைக்கும். பசுமை தழைக்கும்.
   சுற்றுச்  சூழல்ஆர்வலரான இவர் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகிறார். இடமும் மின்சாரமும் கொடுத்தால் போதும் பிஞ்சு நெஞ்சங்களில் மரங்கள் பற்றிய விழிப்புணர்வை என்னால் பதிய வைக்கமுடிய்ம் என்று அறுதியிட்டுக் கூறுகிறார். ஆர்வமுள்ள ஆசிரியர்கள்
அவரை கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளாலாம்.
M.Yoganathan
Pr No : 3994,
Tamilnadu State Transport Corporation,
Maruthamalai Branch,
Coimbatore.


Home Address
107, Thirumalai Samy Naidu Street,
New Sidhapudur,
Coimbatore - 44.
Mobile
: 09443091398.
வலைத்தள  முகவரி 
http://yogutree.com

 இதோ மரங்களைப் பற்றிய ஒரு கவிதை.இதை பதிவர் சந்திப்பின்போது இதைத்தான் அவசரம் அவசரமாக எழுதிக் கொண்டிருந்தேன்.  இதை வாசித்து யோகநாதனுக்கு அர்ப்பணிக்க நினைத்தேன். அனால் நேரமின்மை காரணமாக முடியவில்லை. பதிவர்கள் சார்பாக இப்போது யோகநாதனுக்கு கவிதையை அர்ப்பணிக்கிறேன்.
                  பயன்படா மரங்கள் 

             இயற்கைக்கு அழகு சேர்க்கும் 
              அணிகலன் மரமேயாகும் 
              இறைவன்  நமக்களித்த 
              இனியதோர் வரமே யாகும்

              மண்ணுக்கு மழையைத் தருமே
              உலகுக்கு நிழலைத் தருமே
              கண்ணுக்கு குளிர்ச்சி தருமே
              உண்பதற்கு உணவு தருமே

              மலைகளுக்கு ஆடையாகும் 
              குயில்களுக்கு மேடையாகும்
              பறவைகளுக்கு  கூடு ஆகும்
              ஒரு சிலர்க்கு வீடும் ஆகும்
              
              விருந்தினர்  உணவுஉண்ண
              விரும்பியே இலைகள்கொடுக்கும்
              மருந்துகள்  பலவும் தந்து 
              மன்னுயிர் வாழச் செய்யும் 

              எரித்திட விறகைக் கொடுக்கும் 
              அரித்திடும் மண்ணைத் தடுக்கும்
              உண்ணவே கனிகள்  கொடுக்கும்
              உயிர்வளி காற்றில் சேர்க்கும்

              வெம்மையை தடுத்து விடும்
              அசுத்தங்கள் எடுத்து விடும்
              பலப்பல பொருட்கள் செய்ய 
              பணிவுடன் தன்னைக் கொடுக்கும்

              பயன்பெறும் மனிதன் மரத்தை 
              ஒருநாளும் நினைப்பதில்லை 
              சுயநல மனிதர் அவர்க்கு 
              இயற்கையின்  மன்னிப் பில்லை

              மக்கட்  பண்பில்லா மனிதர் 
              மரம்போலே ஆவாரென்று
              வான்புகழ் வள்ளுவன் ஏனோ
              வாய் தவறி சொன்னான் அன்று 

              பயன்படா மரங்கள் என்றும் 
              மண்ணிலே முளைத்ததில்லை 
              மடிந்தபின்னும் மனிதருக்குதவும் 
              மரங்களுக்கு இணையே இல்லை.

              மரங்களின்  மகிமை அறியா
              மனிதரில்  சிலபேர் தன்னை 
              பயன்படா மரங்கள் என்பேன் 
              மறுப்பேதும் உண்டோ? சொல்வீர்!.


***********************************************************************************************
இதை படிச்சிட்டீங்களா?

Wednesday, May 23, 2012

சந்திப்பு=பதிவர்கள்+விஷாலினி+யோகநாதன்

    20.05.2012 புலவர் ராமானுசம் ஐயா அவர்களின் வேண்டுகோள் கவிதைக்கு கருத்திட்டுவிட்டு யூத் பதிவர் சந்திப்புக்கு புறப்பட்டேன். உதயம் தியேட்டர் அருகே இறங்கி சிவகுமாருக்கு ஃபோன் செய்து இருப்பிடத்தை அறிந்து நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக உள்ளே நுழைந்துவிட்டேன்.
    கேபிள் இளமைத் துடிப்புடன் (யூத்தாம்?) நின்றுகொண்டிருக்க,"ஹலோ! சார், நான் முரளிதரன்" என்று அறிமுகப்படுத்திக்கொள்ள "உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே" என்று கேட்க  "ஆமாம், புக் ஃபேர் ல பாத்திருக்கோம்." என்று நான் சொல்ல பரவாயில்லையே நம்மை நினைவு வைத்திருக்கிராரே என்று நான் மகிழ்ச்சி அடைந்து உட்கார, மீண்டும் , "உங்களை எங்கேயோ பார்த்திருக்கேறேனே" என்ற குரல் கேட்க ,இப்பதானே கேட்டார்! என்று நான் திரும்பிப் பார்க்க அடுத்து வந்த பதிவரை அதே கேள்வியுடன்  வரவேற்று இணைப்பு கொடுத்துக் கொண்டிருந்தார்  கேபிள்.
      மெட்ராஸ் பவன் சிவகுமார் இங்குமங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். முதல் முறையாக  அவரை நேரில் பார்த்தேன். சத்தியம் டி.வி இல்  பார்த்ததைவிட இளமையாக இருந்தார்.
      ஒரு சில பதிவர்கள் தானாக வந்து அறிமுகப் படுத்திக் கொண்டார்கள். புலவர் ஐயாவும் சென்னை பித்தன் அவர்களும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். முதன் முறையாக அவரைப் பார்த்தாலும் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. என்னை முரளிதரன் என்று அறிமுகப் படுத்திக்கொள்ள, கையைக் குலுக்கி, " இனிஷியலோடு டி.என்.முரளிதரன்னு  சொல்லுங்க " என்றார் கலகலப்பாக. அவர் என்னை அறிந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. புலவர் அவர்களிடமும் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள, அவரும் என்னை நினைவில் கொண்டிருந்தார்.   "என்ன படிச்சிருக்கீங்க! என்று கேட்டார். நான் கணிதம் என்று சொல்ல "அப்படியா நல்லா தமிழ்  எழுதறீங்க! தமிழ் படிச்சிருப்பீங்களோன்னு நினச்சேன்" என்றார். பேச்சில் அவர் பெருந்தன்மை வெளிப்பட்டது.

   சட்டென்று  திரும்பிப் பார்க்க மின்னல் வரிகள் கணேஷ் அமர்ந்திருந்தார். அவரும் உங்கள் பக்கத்திற்கு வந்திருக்கிறேன். உங்கள் அடையாள படம் பாரதி எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார்.
     சிறப்பு விருந்தினர்கள் விஷாலினி , யோகநாதன் ,கோகுல் தயாராக இருந்தனர்.  ஆரூர் மூனா செந்தில் புலவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

  "இந்த முறையாவது ஒரு அமைப்பை உருவாக்குங்கள். பதிவர்களுக்கு மிகவும் அவசியமானது இது. எதிர்காலத்தில் நிச்சயம் பதிவர்களுக்கு பல்வேறு வகையில் உதவியாக அமையும். நீங்கள் பொறுப்பேற்று நடத்துங்கள்.  அதற்கான செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னார்." இன்று எப்படியும் செய்து விடலாம் என்றார் ஆரூர் மூனா செந்தில்
ஆனால்  கடைசிவரை அதைப்பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
        நிகழ்ச்சி தொடங்கியது. ஒரே வரியில் அனைவரையும் வரவேற்றார் சிவகுமார். கேபிள் தொகுப்பில் ஈடுபட அனைவரும் ஒவ்வொருவாராக மைக் பிடித்து தங்களை அறிமுகப் படுத்திக்கொண்டனர். எழுத்தில் பிய்த்து உதறும் பெரும்பாலான பதிவர்கள் பலருக்கு  மேடைக் கூச்சம் காணப்பட்டது. சென்னைபித்தன் அவர்களும் புலவர் அவர்களும் கம்பீரமாக அறிமுகப் படுத்திக்கொண்டனர். பிலாசபி,அப்துல்லா கார்க்கி, வீடு சுரேஷ் இவர்கள் அறிமுகமானார்கள்
       அறிமுகப் படலத்தின்போது பின்புறத்தில் இருந்து நக்கல் நையாண்டியுடன் உடனூட்டங்கள் (பின்னாடி வந்தா பின்னூட்டம்,உடனே சொன்னதால உடனூட்டம் ..ஹி,ஹி,) வந்து கொண்டிருந்தன.
       பின்னர் சிறப்பு விருந்தினர் சாதனைச் சிறுமி விஷாலினியின்  தாய் பேச அழைக்கப்பட்டார். ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த அந்த தாய் தன்  மகளின் சாதனைகளை அடுக்கினார். விஷாலினியின் நுண்ணறிவு ஈவு 225. நான்கு உலக சாதனைகளை நிகழ்த்தி உள்ளதாகவும் ஆனால் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், பதிவர் 'உணவு உலகம்' சங்கரலிங்கம் அவர்கள் எழுதிய பதிவு, உலகமே தனது பெண்ணை  கவனிக்க காரணமாக அமைந்தது என்றார். தினமும் ஆயிரக் கணக்கான மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருப்பாதாகவும் கூறினார். சான்றுக்கு ஒரு நாளில் வந்த அஞ்சல்களை அச்செடுத்து வந்திருந்தார். அதுவே மிகப் பெரிய புத்தகமாக இருந்தது.
    விஷாலினியின் சாதனைகளை வெளி உலகிற்கு அறிமுகப் படுத்த தான் பட்ட கஷ்டங்களை விளக்கினார். ஒருமணிநேரம் நீண்ட அவரது பேச்சு  ஆதங்கம்,சிறு கோபம், தன்னம்பிக்கை,பெருமை முதலிய உணர்ச்சிகள் நிறைந்ததாக அமைந்தது.
   அந்தப் பெண்ணிற்கு பதிவர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அதை வெளிக்கொண்டுவந்த சங்கரலிங்கத்திற்கும் பாராட்டுக்கள்.

   மரங்களை காதலியோடு சேர்த்து சுற்றி வந்து ஆடிப் பாடுபவர்கள் நமது திரைப்படக் கதாநாயகர்கள். ஆனால் மரங்களையே காதலியாக நினைத்து அதை சுற்றி வந்து காதலிக்கும் உண்மையான  கதாநாயகன் யோகநாதன்
  நடத்துனாராகப் பணியாற்றும் யோகநாதன் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் மரங்கள் வெட்டப் படுவதை தடுக்க தான் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை உணர்ச்சியோடு விவரித்தார்.. இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரா என்று ஆச்சர்யப்பட வைத்தது. எதிர்ப்புகளின் காராணமாக 23 மாதத்தில் 9 முறை இட மாற்றம் செய்யப்பட்டார் என்பதை அறியும்போது வேதனை ஏற்பட்டது. மரங்கள் நடுவதற்கும் மரம் வெட்டுவதை தடுப்பதற்கும் பண இழப்புகளையும் பொருட்படுத்தாது செய்த பணிகள் பிரமிக்க வைத்தன. தனது அழைப்பட்டையில் சுற்றுச் சூழல் போராளி (Eco Warrior) என்று அச்சடித்துள்ளார். இப் பணிகளுக்கு விடுப்பு கிடைக்காததால் அடிக்கடி தான் சம்பளமில்லா விடுப்பில் செல்வதாகவும் சேமநலநிதியில் பணம் எடுத்து செலவுசெய்ததாகவும் சொன்னது வேதனை அளித்தது.  அவரது சேவைகளைப் பார்க்கும்போது நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்தோம்! என்று வெட்கப் பட வைத்தார்.
     பதிவர் அப்துல்லா யோகநாதனை பாராட்டிப் பேசினார். யோகநாதன் அரசு அதிகாரிகளையும் ஊழியர்களையும் தான் நம்பவில்லை என்று சொன்னதற்கு தாங்கள் அப்படி சொல்வது சரியல்ல பேருந்து நடத்துனர்களைக் கூடத்தான் மக்கள் நம்பவில்லை. ஆனனல் நீங்கள் நம்பிக்கைக்குரியரவராக இருக்கிறீர்களே என்று சொன்னபோது கைத் தட்டல்கள் கிடைத்தது.
     கேபிள் சங்கர் பதிவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தவர் என்று புகழ்ந்தார்.உண்மைதான்.
 மேலும் ஓரிருவர் பேசியதும் கேபிள் அண்ணன் மிக சுருக்கமாக நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

    மரங்களைப் பற்றிய ஒரு கவிதை எழுதி அதை ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை படைத்த யோகநாதனுக்கு வாசித்து அர்ப்பணிக்க நினைத்த நான் அதற்கு நேரம் கிடைக்காததால்  புறப்படுமுன்  அவரைப் பார்த்து சேவையைப் பாராட்டி கவிதை எழுதி இருப்பதையும் சொல்லி, அவருடைய சேவைகளுக்காக செலவு செய்யும் பணத்தை எல்லாம் ஈடு செய்ய  முடியாது என்றாலும் ஒரு  ஐநூறு ரூபாயை அவரிடம் மரங்களுக்காகப் பயன் படுத்திக்கொள்ளும்படி வற்புறுத்திக் கொடுத்தேன்.
(பிறகு சிந்தித்துப் பார்த்தபோது அனவைருக்கும் எதிரில் தந்திருந்தால் வேறு யாரேனும் கூட தந்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியது.)

   பதிவர் கோகுலுக்கு சிறந்த யூத் பதிவர் விருது வழங்கப்பட்டது.அவர் தனது திருமண அழைப்பிதழை வந்திருந்தோருக்கு வழங்கினார். நிகழ்ச்சி அதிக நேரம் நடந்ததால் பேச நினைத்த புலவர் அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. பதிவர்சங்கம் உருவாக்கவேண்டும் என்று எண்ணத்தை வலியுறுத்த இயலவில்லை. 
   இது தொடர்பாக கேபிள் சங்கர் அவர்களுடனும் பேசிக் கொண்டிருந்தார்.
   நிகழ்ச்சியை வடிவமைப்பதில் இன்னும் கொஞ்சம் seriousness இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
   பதிவர் சந்திப்பிற்கு இடம்  அளித்து டிஸ்கவரி புக் பேலஸ்  மற்றும் தேநீர் விருந்தோடு பயனுள்ள வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை நடத்திய பதிவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தவித பிரதிபலனும் பாராமல் உழைத்த பதிவுலக நண்பர்களுக்கு நன்றி. டிஸ்கவரி புக் பேலஸ் வந்திருந்த அனைவருக்கும்ஜெயமோகன் புத்தகத்தை நினைவுப் பரிசாக அளித்தது.
இது  ஒரு பதிவு செய்யப்பட வேண்டிய பதிவர் சந்திப்பு.

  அடுத்த  சந்திப்பை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

யோக நாதனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மரங்கள் பற்றிய கவிதை அடுத்த பதிவில்
 .

Monday, May 21, 2012

+2 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள

           (முடிவுகளுக்கான இணைப்புகள்  கீழே உள்ளது.)
  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில  மணிநேரமே உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் எதிர்காலமே அன்றுதான்  தெரியப்போகிறது என்ற (தவறான) எண்ணத்துடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். மாணவர்களைவிட அதிக டென்ஷனுடன் இருப்பார்கள். அநேகமாக இன்று இரவு அவர்களுக்கு உறக்கம் வராது. உறவினர், நண்பர்களின் மகன்/மகன்களோடு ஒப்பீடு செய்யத் துடித்துக் கொண்டிருப்பார்கள். முன்பெல்லாம் +2 தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வெளிவரும். அதில் மதிப்பெண்கள் அறிய முடியாது. ஒரு வார காலத்திற்குப் பிறகே பள்ளிக்கு மதிப்பெண் சான்றிதழ் வரும், அப்போதுதான் மதிப்பெண்களையே அறிந்து கொள்ள முடியும். இப்போது அப்படியல்ல. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, முடிவுடன் சேர்த்து மதிப்பெண்களும் தெரிந்துவிடுகிறது. தேர்ச்சி பெற்றாலே பெரிய விஷயம் என்ற நிலை மாறி அதிக மதிப்பெண்களே குறிக்கோளாக அமைந்துள்ளது. எண்பது சதவீதம் வாங்கினால் கூட ஏன் அவ்வளோ குறைஞ்சிபோச்சு என்று பரிதாபத்துடன் பார்ப்பவர்களும் உண்டு. 
  ஆனால் இன்றும் தேர்வில் தோல்வி அடைபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.
      அதெல்லாம் இருக்கட்டும். கீழ்க்கண்ட இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.முன்பெல்லாம் மற்றவர்களின் மதிப்பெண்களை அவர்கள் சொன்னால்தான் தெரிந்து கொள்ளமுடியும்.அது உண்மையா பொய்யா என்று அறிந்து கொள்ள இயலாது. ஆனால் இப்போது மற்றவர்களுடைய மதிப்பெண்களையும் அறிந்துகொள்ள முடியும். 
   உங்கள் மகன்/மகள், உறவினர்களின் மகன்/மகள் உங்கள் போட்டியாளார்களின்  மதிப்பெண்களையும் அறிந்து கொள்ளுங்கள். ஆனால் யாருடனும் யாரையும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
இது  தேர்வு முடிவுதானே தவிர வாழ்க்கை முடிவு அல்ல என்பதை உணர்வோம்! உணர்த்துவோம்!.
மாணவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்!.
இந்த இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து நுழையுங்கள்.
http://tnresults.nic.in/
http://dge1.tn.nic.in/
http://dge2.tn.nic.in/
http://dge3.tn.nic.in/
http://tnpubliclibraries.gov.in/
https://results.reportbee.com/
http://results.dinamalar.com/
http://dinakaran.com/
http://jayanews.in/
http://tnresults.puthiyathalaimurai.tv/


************************************************************************************************************
 மார்ச் 2012 ல சிலர் இப்படி இருந்தாங்க!இதையும் படிச்சி பாருங்க!
தேர்வு வந்துடிச்சி! டென்ஷன் ஏறிடிச்சி!

Sunday, May 20, 2012

அது உன் கவலை! எனக்கென்ன?


 அது ஒரு கிராமத்து வீடு. அந்த வீட்டுக்காரன் வாத்து, கோழி,  பன்றி, ஆடு, மாடு,இவற்றை வளர்த்து வந்தான். அந்த வீட்டில் எலி ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நாள் வீட்டுக்காரன் பையில் ஏதோ வாங்கி வந்திருந்தான். .மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த எலி அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்தது.

    பைக்குள்ளிருந்து அந்தப் பொருளை  வெளியே எடுத்தான் வீட்டுக்காரன். அதைப் பார்த்த எலி அதிர்ச்சி அடைந்தது. அது ஒரு எலிப்பொறி. அதை தன் மனைவியிடம் சொல்லிக்  கொண்டிருந்தான், "இனி நம் வீட்டில் எலித் தொல்லை இருக்காது. இன்று இரவு ஒரு மசால் வடையை உள்ளே வைத்து எலிப்பொறியை மூலையில் வைத்துவிடு. எலி மாட்டிக்கொண்டுவிடும்"

  தனக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய எலி வெளியே ஓடிவந்து அங்கிருந்த கோழியிடம் "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

   அதைகேட்ட  கோழி, "ஏ, எலியே! அது உன் கவலை.எனக்கென்ன? எலிப்பொறியில் நானா மாட்டப் போகிறேன்?." என்று அலட்சியத்துடன் சொன்னது.

  வருத்தமடைந்த எலி அருகில் இருந்த வாத்தைப் பார்த்து,"இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" என்று எச்சரித்தது.

   "முட்டாள் எலியே! என்னிடம் ஏன் இதைச் சொல்கிறாய்?என்னால் உனக்கு உதவ முடியாது, போ!போ!" துரத்தியது வாத்து.

   வேதனையுடன் ஆட்டிடம் சென்று சொன்னது "இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை"

   "ஓ! எலியே! உன் நிலை பரிதாபமாகத்தான்  உள்ளது. எதற்கும் நீ எச்சரிக்கையாக இரு. மசால் வடை வாசனைக்கு மயங்கி விடாதே!"
என்று ஏளனத்துடன் சொல்லி விட்டு தழையைத் தின்ன ஆரம்பித்தது.

    என்ன  செய்வது என்று புரியாமல் நின்ற எலி பன்றியைப் பார்த்து, "பன்றியே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை!" எனக் கூவியது.

    "எலியே! எலிப்பொறியால் என்னை என்ன செய்ய இயலும்.? அதனால் எனக்கு கவலையில்லை. நான் வீட்டுக்கு வெளியே இருக்கிறேன். என் உதவியை எதிர்பார்பப்பது வீண்?" என்று சொல்லிவிட்டது பன்றி.

    கடைசியாக பசுவிடம் வந்த எலி, "ஓ! பசுவே! இந்த வீட்டில் ஒரு எலிப்பொறி இருக்கிறது எச்சரிக்கை! எச்சரிக்கை" என்றது.

  "உன்னை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. உன்னால் அவர்களுக்கு என்ன லாபம்? எங்களைப் போல் அவர்களுக்கு நீ உதவியா செய்கிறாய்? அவர்கள் சேர்த்து வைத்ததை எல்லாம் தின்று விடுகிறாய். அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறாய். உன்னை அவர்கள் கொல்ல  நினைப்பது நியாம்தானே! உன் தலைவிதி அவ்வளவுதான்!" என்று கிண்டலடித்து சிரித்தது பசு.

   யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் இரவு தூங்காமல் எச்சரிக்கையுடன் விழித்திருந்தது எலி.
      
   நடு இரவில் திடீரென்று  எலிப்பொறி மூடிக் கொள்ளும் சத்தம் கேட்டது. எலி மாட்டிக்கொண்டிருக்கும் என்று நினைத்து வீட்டுக்காரனின் மனைவி எலிப்பொறியை எடுக்க சென்றாள் அதில் ஒரு நச்சுப் பாம்பின் வால் பொறியில் மாட்டிகொண்டது. அதை அறியாமல் பொறியைத் தொட, பாம்பு தீண்டிவிட்டது. வீட்டுக்காரனின் மனைவி அலற, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் வீட்டுக்காரன். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியபோதும் மனைவிக்கு காய்ச்சல் குறையவில்லை.
  
  கோழி சூப் வைத்து சாப்பிட்டால் காய்ச்சல் நின்றுவிடும் என்று யாரோ சொல்ல, அதைகேட்ட வீட்டுக்காரன் தான் வளர்த்த கோழியைக் கொன்றான் சூப் வைத்து சாப்பிட. ஆனாலும் மனைவியின் நிலையில் முன்னேற்றம் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்கள்,நண்பர்கள்  என்று தினந்தோறும் ஒரு பெருங்கூட்டம் அவனது மனைவியைப் பார்க்க வந்து கொண்டிருந்தது .
   வந்திருப்பவர்களுக்கு உணவளிப்பதற்காக வாத்துகளைக் கொன்றான். அதுவும் போதாமல் ஆட்டையும் இறைச்சிக்காக கொன்றுவிட்டான். மனைவியின் சிகிச்சைக்கு செலவு செய்ய பன்றியை இறைச்சிக் கடைக்கு விற்றுவிட்டான்.

  எந்த சிகிச்சையும் பலனளிக்காமல் வீட்டுக்காரனின் மனைவி இறந்து போனாள். ஈமச் சடங்கிற்கும் அதன் பின் நிகழ்வுகளுக்கும்  பணம் இல்லாதால் தான் வளர்த்த மாட்டை மாட்டிறைச்சி வியாபாரியிடம் அடிமாடாக விற்றுவிட்டான்.

    இவை  அனைத்தையும்  வீட்டுக்குள்ளிருந்து   வேதனையுடனும் கவலையுடனும் பார்த்துக்கொண்டிருந்த எலி "நான் மட்டும்தான் ஆபத்தில் இருக்கிறேன் என்று நினைத்து எனது எச்சரிக்கையை இவர்கள் அலட்சியப் படுத்தினார்களே! எனக்கு வந்த ஆபத்து இவர்களை அல்லவா பலி கொண்டுவிட்டது." என்று சொல்லி அழுதது.

"பிறர்  ஆபத்தில்  இருக்கும்போது துன்பம் அவர்களுக்குத்தானே! அதனால் நமக்கென்ன என்று சுயநலத்துடன் இருக்கிறோம். அத்துன்பம் ஏதேனும் ஒருவகையில் நம்மைத் தாக்கும்போதுதான் உண்மையை உணர்கிறோம்."
எலி  எனக்கு சொன்ன பாடமிது. இல்லை! இல்லை  எலி  எனக்கு சொன்ன வேதமிது.

பிடித்திருந்தால்  கருத்தளிப்பீர்! வாக்களிப்பீர்!

***********************************************************************************************
இதையும் படியுங்க!


  

Thursday, May 17, 2012

IPL - ஒரு கிரிக்கெட் ரசிகரின் திருக்குறள்

   ஐ.பி.எல் தேவையா வேண்டாமா என்று ஒரு பக்கம் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வேண்டாம் என்பவர்களுக்கு வலு சேர்க்கும் வகையில் சூதாட்டப் புகார்கள்.இவை  கிரிக்கெட் ரசிகர்களை வருத்தம் அடையைச் செய்கின்றன. இருந்தபோதும் இளைஞர்களின்  ஐ.பி.எல் ஆர்வம் இதனால் குறைந்து விடாது என்றே தோன்றுகிறது. உற்சாகம் கொப்பளிக்கும் ஐ.பி.எல் ஒரு திருவிழாவாகவே அமைந்துள்ளது. 
   பிரபல பதிவர் மோகன்குமார் சொல்வது போல ஐ.பி.எல் முழு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்து (சண்டைக் காட்சிகள் கூட களத்தில் உண்டு)  காணப்படுகிறது. முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட ஐ.பி.எல் காலங்களில் திரைப்படங்கள் வெளியிடத் தயங்குகிறார்கள். திரை அரங்குகள் காலியாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
   இதெல்லாம்  எதற்கு சொல்கிறேன் என்றால் ஐ.பி.எல் நடந்து கொண்டிருக்கும்போதே  அதைப் பற்றி எழுதிய பத்து திருக்குறளை பதிவிடப் போகிறேன் என்று எச்சரிப்பதற்காகத்தான் (திருவள்ளுவர் எழுதியதுதான் திருக்குறள். நீ எழுதினா தெருக்குரல் என்றுயாரோ சொல்வது போல் இருக்கிறது.)

1.          தேவையா  ஐ.பி.எல் என்பார் சிலபேர்கள் 
             சொல்வதை  மறந்து  விடு.

2.          இளமைக்கே ஐ.பி.எல் என்றிருக்க வேண்டாம்
            தலை'மை' அடித்தாவது செல் 

3.          ஆண்டியும்  வந்திடுவார்  காண்பதற்கு ஐ.பி.எல்
             தூண்டும் கிரிக்கெட் வெறி

4.          ஒன்றும் இரண்டும் ஓடாதே  எப்போதும் 
            சிக்சரும் ஃபோரும் அடி.

5.           தடுப்பாட்டம் வேண்டாம் தம்பிகளே-அப்போது 
             கடுப்பாகி வீசுவார் கல்

6.           கேட்ச்கள் விடுதல் அழகல்ல அதனாலே
             மேட்ச்வெற்றி கைவிட்டுப் போம்.

7.           ஒருரன் ஒரு பந்து விக்கெட்டால் ஆட்டம்
             விறுவிறுப்பு கூடுமே பார்.

8.           ஏளனமாய் நினைக்காதே எதிரணியை அவ்வணியின்
             ஏப்பபையும் எட்டுவார் இலக்கு.

9.           ஆட்டம் போரடிக்கும் நேரமுண்டு அப்போது 
             அழகியர்  ஆட்டம் ரசி.

10.          சூதாடும் ஜாக்கியிடம் சிக்காதே உன்வாழ்வு 
             சூனியமாய் ஆகிவிடும் சிந்தி.


( இதுக்கெல்லாம் இலக்கணம் பாக்கப்படாது.)

*********************************************************************************************************
பிடிச்சிருந்தா  தட்டலாம் 
பிடிக்கலன்னா திட்டலாம்  
கோவம்னா    குட்டலாம்
இதைப் படிச்சாச்சா?