என்னை கவனிப்பவர்கள்

வியாழன், 14 மார்ச், 2013

குட்டிக் கதை-படிச்சா ஷாக் ஆயிடுவீங்க!


   நான் குழந்தையாக இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் அப்பா. அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தாலும் அம்மாவும் ஒன்றும் சொல்லவில்லை. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார்.நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது.என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது. 

  அவர் ஒரு அற்புதமாக சொல்வார். அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார்.காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர். விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார்.அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்..சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார். அவஸ்தையிலும் மூழ்க அடிப்பார். 

      நாட்கள் விரைந்தது . நாளுக்கு நாள் அவரது பேச்சு அதிகரித்ததே தவிர குறையவில்லை. அம்மாவுக்கு இப்போதெல்லாம் அவரைப் பிடிப்பதில்லை.அவரை வெளியே அனுப்பிவிட விரும்பினாள். ஆனால் அது முடியவில்லை. அப்பா அவரைப் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளவில்லை. தற்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் வருவதில்லை. உறவினர்களை சரியாக கவனிக்க முடியாமல் அவர் தடுத்தார். நெடுநாளைய நண்பர்களும் எங்களிடமிருந்து விலகிப் போனதற்கு அவர் காரணமானார்.

   எனது தந்தை மது அருந்துவதை விரும்பமாட்டார்.அவரோ மது அருந்துவதை உற்சாகத்துடன் ஊக்குவித்தார். சிகரெட் பிடிப்பது புகையிலை பயன்படுத்துவது இவற்றை ஒளிவு மறைவின்றி யார் இருந்தாலும்  தயக்கம் இல்லாமல் தவறில்லை என்பது போல்  தினந்தோறும் கூறி வந்தார். செக்ஸ் பற்றி கூச்சமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் அவரால் பேச முடிகிறது.  எங்கள் அன்றாட வாழ்க்கையில் உறவுமுறை முதல் உணவு முறை வரை  அவரால் மாற்றங்கள் ஏற்பட்டது .நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட குறைந்து போனது. 

   எனது தாய் தந்தையர் பின்பற்றச் சொல்லும் நல்ல விஷயங்களுக்கு எதிராகவே கருத்து கூறி வருவதை வழக்கமாகக் கொண்டார். நல்ல கருத்துக்களை அவர் காது கொடுத்துக் கேட்பதில்லை .நாங்கள் எங்கு இடம் மாறினாலும் கூடவே வந்த அவரை தடுக்க முடிய வில்லை. 

   இப்போது  நீங்கள் எங்கள் வீட்டுக்கு வந்தாலும் அவரைப் பார்க்கலாம். இன்னமும் ஹாலில் உட்கார்ந்துகொண்டு உங்களுடன் பேசக் காத்துக் கொண்டிருக்கிறார்.நாங்கள் பேசுகிறோமோ இல்லையோ அவர் உங்களிடம் நிச்சயம் பேசுவார்.அப்படி யார் அவர்?அவர் பெயர் என்ன? அவருக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் என்ன? என்றுதானே கேட்கிறீர்கள்? அவருடைய பெயரை சொன்னால் நீங்கள் இப்படிப் கேட்க மாட்டீர்கள். கொஞ்சம் இருங்கள் அவரைப் பற்றி இடைவிடாமல் சொன்னதில் தாகம் எடுத்துவிட்டது. இதோ தண்ணீர் குடித்துவிட்டு வந்து அவர் யாரென்று கூறுகிறேன்.................... ............................ .................... ............
 ...................... ................................ ................................ ............................... ...................

   சொல்கிறேன் கேளுங்கள்.அவரை நாங்கள்  "டிவி" என்றழைப்போம். அவருக்கு திருமணம் ஆகி விட்டது. அவருடைய மனைவியும் எங்கள் வீட்டில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார்.அவருடைய மனைவியின்  பெயர் "கம்ப்யூட்டர்". இவர்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவனும் எங்களோடு விடாப்பிடியாக ஒட்டிகொண்டான். அவன் பெயர் கைபேசி. இப்போது சொல்லுங்கள் இவர்களை எப்படி வெளியே அனுப்புவது?

***************************************************************************

37 கருத்துகள்:

  1. ///இப்போது சொல்லுங்கள் இவர்களை எப்படி வெளியே அனுப்புவது?///

    அவர்களை வெளியே அனுப்பவது என்பது இனிமேல் இயலாது ஒன்று. ஆனால் அவர்களை ஒரு வீட்டில் விட்டு விட்டு நீங்கள் வெளியே அப்ப அப்ப வந்து வாழ்க்கை அனுபவங்களை நேரில் பார்த்து கற்றுக் கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியே போக விடாம கட்டிப் போடறுதுதானே அவங்க திறமையா இருக்கு.
      நன்றி

      நீக்கு
  2. ஹா... ஹா...

    அது சரி... வேண்டாததை எல்லாம் ஏன் பார்க்க வேண்டும்...?

    பதிலளிநீக்கு
  3. இரண்டாவது பத்தி படிக்கும் போதே அவர் டி.வி ன்னு தெரிஞ்சிப்போச்சு..(ஆஹா எம்மாம் அறிவு நானு?) நான் என் அம்மாவிற்கு போன் பேசினால் அந்த நேரம் சீரியல் நேரமாயிருந்தா... பட்டும் படாமல் அவசரமா பேசுவாங்க..என்ன.. நாடகம் பார்த்திட்டிருக்கிங்களா? அப்புறம் பேசவா என்று கேட்டு வைத்து விடுவேன். சீரியல் இல்லாத நேரமா பார்த்துதான் என் அம்மாவிடமே பேச முடிகிறது. படிக்காதவங்களுக்கு முழு நேர டி.வியும், படித்தவங்களுக்கு பாதி டி.வி மீதி கம்ப்யூட்டர்னு உலகம் ஆயிடுச்சி.
    எட்டி பார்த்த குட்டி கதை. நல்லா இருக்கு. உங்களுக்குன்னு ஒரு தனி பாணி இருக்கிறதை ஒத்துக்கறோம்ங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! எழுத்தாளராச்சே ஏமாத்த முடியுமா?நீங்க நிச்சயமா புத்தி சாலிதான்
      நன்றி உஷா மேடம் .

      நீக்கு
  4. நடுவிலேயே எனக்குப் பரிந்து விட்டது !சொன்ன பாணி அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அனுபவத்தையும் அறிவாற்றலயும் மிஞ்ச முடியுமா?. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  5. இந்தக் கதையை நான் எட்டிப் பாக்காமலே படித்திருக்கிறேன்...அப்போல்லாம் திண்ணையில உட்கார்ந்து ஒரு கூட்டம் பேசுமில்லையா.. அந்தக் கூட்டம் தான் இப்போது தொலைக்காட்சியின் முன்பும், கணிணியின் முன்பும் ... அடுத்த வீட்டுக் கதையை அனாவசியமா பேசி வெளி சண்டைகள் வரவில்லையெனினும் இப்போது வீட்டுக்குள்ளேயே சண்டைகள் வர காரணமாயிருக்கும் பெட்டிகள்

    பதிலளிநீக்கு
  6. கடைசிவரை என்னால் முடிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

    நீங்களும் நல்லதொரு ’கதை சொல்லி’தான்.

    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா!

      நீக்கு
  7. குட்டிக்குதை நன்றாக இருக்கிறது. யார் என்பதை புரிந்து கொண்டேன் நீங்கள் சொல்வதற்குள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி மேடம் அனுபவசாலி ஆச்சே! நிச்சயமா கண்டு பிடிச்சி இருப்பீங்க. நன்றி மேடம்

      நீக்கு
  8. பாதியிலேயே டிவி என கண்டுபிடித்து விட்டேன்! நல்ல கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. கதையின் நடுவில் இது தொலைக்காட்சியைப் பற்றியதுதான் என்பது புரிந்துவிட்டது, இறுதியில் கணினியை அவரது மனைவி என்பது டுவிஸ்ட். அப்படிப் பார்த்தால், எங்கள் வீட்டில் அவர் செத்து போயிட்டார் அவர் மனைவி மட்டும் பூவும் பொட்டோடும் இருக்காங்க. அதாவது, கேபிளை பிடுங்கிவிட்டோம், DVD பிளேயரை மூட்டை கட்டிவிட்டோம் [குழந்தைகளைக் காக்க இந்த ஏற்ப்பாடு!! ] , கணினி இணையத்தோடு இருக்கிறது!! எங்க ஹவுஸ் பாஸ் ஒத்துழைப்பதாலும் குழந்தைகள் கணினியில் சில சமயம் கார்ட்டூன் பார்ப்பதாலும் இது சாத்தியமாயிற்று. ஆனாலும், என் குடும்பத்தையும் என்னையும் இந்த கணினி அம்மா பிரிக்கிறார், தினமும் அழுகிறேன், நான் இதிலிருந்து விடுபட மாட்டேனா என்று, விரைவில் அதற்கும் ஒரு தீர்வை எட்ட வேண்டும்!!

    பதிலளிநீக்கு
  11. உங்கள் பாணி நல்லாதான் இருக்கு
    அது மனிதர்கள் பிடித்திருக்கும் ' டீபி' முதலிலேயே கண்டு பிடிச்சிடால் அது நமக்கு தொல்லை தராமல் பார்த்து கொள்ளலாம்

    பதிலளிநீக்கு
  12. Damn good.It was only towards the end that I figured it out.
    In the west they started calling it an idiot box long time back.
    You have a tchnic of good narration.
    Good job.

    பதிலளிநீக்கு
  13. இணையதள இணைப்பை துண்டித்து விடுங்கள்.கம்ப்யூட்டர் தானாகவே தற்கொலை செய்து கொல்லும்.பின் உங்களுக்கு விடுதலை தான்

    பதிலளிநீக்கு
  14. கதையைத் தொடக்கத்திலேயே புரிந்து கொண்டாலும்...
    கடைசி வரை விறுவிறுப்பாகக் கொண்டு சென்ற விதம் அருமை.
    தொடர்ந்து எட்டிப்பார்த்ததை எழுதுங்கள் மூங்கில் காற்று.

    பதிலளிநீக்கு
  15. :-)

    ரெண்டு பேருல மனைவி (கணிணி) தான் புத்திசாலியா? :-)))

    பதிலளிநீக்கு
  16. பாதிக்கு மேல நீங்க சொல்லும்போதே நான் அப்படிதான் நெனச்சேன். ரொம்ப கஷ்டம் பா. எடுத்து சொன்ன விதம் அருமை.

    ஆனாலும் எட்டிப்பார்த்த கதையையே இவ்ளோ அருமையா எழுதியிருகிங்கன்னா நீங்க உண்மையிலேயே திறமைசாலிதான்.

    பதிலளிநீக்கு
  17. கணவனால் தொல்லை குறைவு மனைவியின் தொல்லை எக்கச் சக்கம்.அடுத்தாய் இவர்களின் வாரிசு ஸ்மார்ட் போன்களின் தொல்லையும் குறைந்ததல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். கைபேசியை நன் விட்டுவிட்டேன். நல்ல ஐடியா கொடுத்து விட்டீர்கள். கதை ரீமேக் செய்யும்போது செய்து விடுகிறேன்.

      நீக்கு
  18. ஹிஹி...... கதை சொல்வார், நகைச்சுவைக் கதை, வீரக் கதை என்றெல்லாம் படிக்கும்போதே யூகித்து விட்டேன்! :)

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா1 மே, 2013 அன்று AM 1:26

    சொல்லுங்கள் இவர்களை எப்படி வெளியே அனுப்புவது?///
    கஷ்டம் தான்
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895