என்னை கவனிப்பவர்கள்

வருக!உங்கள் கருத்துக்களை தருக!.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்

என்னைப் பற்றி

நான்,  டி.என்.முரளிதரன்
     காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுரந்தகத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவன் நான். சொல்லுமளவிற்கு பெரிதாக சாதிக்கவில்லை. தொடக்கக் கல்வியை அதே கிராமத்தில் பயின்றாலும் பின்னர் சென்னையின்  புற நகர் பகுதியில் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

  தொடக்கத்தில்  ஆசிரியராக பணியைத் தொடங்கிய நான் தற்போது கல்வித்துறையில் அலுவலராக பணி செய்கிறேன்.

    எனக்கு நினைவு தெரிந்து நான்காம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து கதைப் புத்தகங்கள் வாசித்து வருகிறேன். அம்புலிமாமா,ராணி போன்றவற்றை தவறாமல் படித்துவிடுவேன்.ராணிமுத்து வெளியிடும் நாவல்களையும் படித்து விடுவேன். மதுராந்தகத்தில் "இலக்கிய வீதி" என்ற அமைப்பை நடத்தி வந்த எழுத்தாளர் இனியவன் அவர்களை நான் நன்கு அறிவேன். அவருடைய மகள் என்னுடன் கிராமத்தில் படித்து வந்ததால் அவர் அடிக்கடி அங்கு வருவார்.ஒரு எழுத்தாளர் எழுதும்போது அருகே இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளர் ஆகும் ஆசையும் உருவானது. சுஜாதா, இந்துமதி,சிவசங்கரி,புஷ்பா தங்கதுரை,ராஜேந்திரகுமார்,சாண்டில்யன் லக்ஷ்மி,வாஸந்தி, என்று அனைவரின் சிறுகதைகள், நாவல்களை விரும்பி படிப்பேன்.

  நான்  ஒன்பதாம் படிக்குபோது எனது முதல் 'அடித்தளம்' என்ற கதையை எழுதினேன்.அதை நான் யாருக்கும் காட்டவில்லை.ஏனெனில் அந்தக் கதை சிறுவர் கதை அல்ல.வரதட்சனை பற்றிய கதை. அதைப் பற்றி ஏன்  யோசித்தேன் என்று  எனக்கே தெரியவில்லை. இப்போது நினைத்தாலும் சிரிப்பாக  இருக்கிறது ஆனால் எனக்குத் தெரியாமல் படித்த இனியவன் அவர்களின் உறவினர் பத்ரி அதை எடுத்துக்கொண்டு போய் விட்டார். அவர் சென்னையில் டான்பாஸ்கோ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்.எனது கதையை அரும்பு என்ற பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்துவிட்டார்.

      அந்த சமயத்தில் நாங்கள் சென்னைக்கு குடிபெயர்ந்துவிட்டோம் திடீரென்று பத்ரியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.உன்னுடைய கதை பத்திரிகையில் வெளி வந்திருக்கிறது. அந்த ஆசிரியரைப் போய்ப்பார் என்று எழுதி இருந்தார்.
      அந்த  ஆசிரியரைப்  போய்ப் பார்த்து என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். சிறுவனாக நான் இருந்ததால் அந்தக் கதையை நான் எழுதி இருப்பேன் என்று அவரால் நம்ப முடியவில்லை.நண்பர் சொன்னபிறகே நம்பினார்.
   இப்படியாக  எழுத்தின்மீது ஆர்வம் ஏற்பட்டது அவ்வப்போது ஓர் சில கதைகள் கவிதைகள் எழுதிவந்தேன். ஒன்றிரண்டு பிரசுரமானதுண்டு. ஆசிரியப் பணிக்கு சென்றபின் கிடைக்கும் நேரத்தில் கவிதைகள் எழுதுவதுண்டு. ஆசிரியப் பணியோடு துறை சார்ந்த அலுவலகப் பணிகளிலும் ஈடுபட்டதால் எழுதுவது குறைந்து போனது.
       ஒரு நிறுவனம் நான் பணிபுரிந்த பள்ளிக்கு ஒரு பழைய கணினியை நன்கொடையாக வழங்க கணினியை அறிமுகப் படுத்திக் கொண்டேன். கணினி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்பட்டு அடிப்படை விஷயங்களை நானாகவே புத்தகங்கள் படித்து கற்றுக் கொண்டேன்.பின்னர் இணைய  இணைப்பு கொடுத்து ஓராண்டு சென்றபின்னும் வலைப்பூக்களை பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
  மோகன்(ஆனால் அவர் அப்போது எழுதுவதை நிறுத்தி இருந்தார்) என்பவரின் வானவில் எண்ணங்கள்தான் நான் படித்த முதல் பதிவு. அப்போது பதிவுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை அறியாதவனாகவே இருந்தேன்.  பிரம்மாண்டமான தமிழ்ப் பதிவுலகம் உள்ளது என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். விவாதங்கள், சண்டைகள், கிண்டல்கள், கலாய்த்தல்கள், உள்ளது என்பதையும் அறிய நேர்ந்தது, சிறிது அச்சமும் ஏற்பட்டது.

  ஒரு வலைப்பூவை தொடங்கி முதல் மூன்று பதிவுகளுக்குப் பின் கிட்டத்தட்ட ஓராண்டு வரை எந்தப் பதிவும் இடவில்லை. பின்னர் எங்கள் வீட்டில் வளர்ந்த செல்ல நாய் ஜூனோ எதிர் பாரவிதமாக இறக்க  அதன் பாதிப்பில் இரங்கல் கவிதை ஒன்றை (ஜூனோ! எங்கள் செல்லமே!) பதிவிட்டேன். ஒரு சிலர் பார்த்தனர்.
  ஒரு நம்பிக்கை ஏற்பட மேலும் ஒரு சில கவிதைகளை பதிவிட்டேன்.  பிறருடைய பதிவுகளை அதிகமாக வாசிக்கத் தொடங்கினேன். மோகன் என்பவரின் வானவில் எண்ணங்கள்தான் நான் படித்த முதல் பதிவு. அப்போது பதிவுலகில் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதை அறியாதவனாகவே இருந்தேன்.  பிரம்மாண்டமான தமிழ்ப் பதிவுலகம் உள்ளது என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன். விவாதங்கள், சண்டைகள், கிண்டல்கள், கலாய்த்தல்கள், உள்ளது என்பதையும் அறிய நேர்ந்தது, சிறிது அச்சமும் ஏற்பட்டது.

   தமிழ்மணம்  வலைத்திரட்டி பற்றி தெரிந்துகொண்டு என்னுடைய வலைப்பதிவையும் இணைத்த பிறகுதான் திருப்பம் ஏற்பட்டது. எனது பதிவுகள் கவனிக்கப் பட ஆரம்பித்தது. கவிதைகள் மட்டுமல்லாது பிற தலைப்புகளிலும் பதிவிட்டேன். சமூகம்,நகைச்சுவை,தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிரச்சனைகள் என்று என் மனதில் தோன்றும் விஷயங்களை எழுதிக் கொண்டிருக்கிறேன்.இதுவரை 130 பதிவுகளை எழுதி இருக்கிறேன். இன்று தமிழ் மணத்தின் தரவரிசையில் 51 வதாக இருக்கிறேன். இத்தனைக்கும் மேலாக பல முகம் தெரியாத நண்பர்கள் கிடைத்தார்கள்.பல பிரபலங்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது..
எனது வலைப பதிவிற்கு Libester Blog விருது வழங்கிய 'தண்ணீர்ப்  பந்தல்' சுப்பிரமணியன்The Versatile Blogger Award,வழங்கிய "திடங்கொண்டு போராடு" சீனு அவர்கள் மற்றும் The Sunshine Blogger Award வழங்கிய வை. கோபலகிருஷ்ணன்   ஐயா  மூவருக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  நான் ஓரளவிற்காவது அறிமுகம் ஆகி இருக்கிறேன் என்றால் அதற்கு தமிழ்மணமே முக்கியக் காரணம். அத்தகைய தமிழ் மணத்தின் நட்சத்திரப் பதிவர் என்ற அந்தஸ்தை எனக்கு வழங்க முன் வந்த தமிழ்மணத்தை என்னால் மறக்க இயலாது. தமிழ்மணத்திற்கும் இதற்காகப் பரிந்துரை செய்த திரு கோவி.கண்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

8 comments:

  1. சுவையான அறிமுகம்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சார் மேலும் மேலும் வெற்றி பெற

    ReplyDelete
  3. க.சாந்தக்குமார்September 16, 2012 at 11:25 AM

    ஜயா! பல உபயோகமான விஷயங்களை அறிந்துக்கொண்டேன் ---- தங்கள் பதிவுகள் பொக்கிஷங்கள்

    ReplyDelete

  4. வணக்கம்

    நினைத்தேன்! சொல்கி றேன்என்ற
    நேய நெஞ்சை வாழ்த்துகிறேன்!
    அனைத்தேன் உன்றன் பதிவுகளை
    அழகின் பெருக்கு மயக்கியதால்!
    இணைத்தேன் தொடரும் நட்புறவில்
    ஏனோ பதிலே வரவில்லை!
    பிணைத்தேன் மீண்டும் விருத்தத்தை!
    பெருமைத் தமிழின் பித்தினிலே!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    ReplyDelete
  5. You can Share this Website also... http://tamilinfoway.com

    ReplyDelete
  6. அன்பின் முரளி - நல்லதொரு அறிமுகம் - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  7. வணக்கம்
    டி,என் முரளிதரன்(அண்ணா)

    உங்களைப்பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது சின்னவயதில் இருந்து எழுதவேண்டும் என்ற சிந்தனை தூரல் உங்கள் மனதில் ஊறியது அதை வெளிக்காட்டாமல் வேலை குடும்பம் என்ற வட்டத்துக்குள் வாழவேண்டி நிலை ஏற்பட்டது அதை எல்லாம் பொருட்ப்படுத்தாமல் எழுத்துலகில் முத்திரை பதிக்கவேண்டும் என்ற எண்னக்கிறல் உருவாகியது
    மேலும் இந்த எழுத்துலகில் பல தடைக்கற்களை உடைத்து வெற்றிப்படிகளை அடைய வேண்டுமென்று வாழ்த்துகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. புன்னகை உலகம் என்ற மாத இதழுக்காக வேங்கடலட்சுமியை முழுமையான ஒரு பெட்டி எடுத்து அனுப்ப முடியுமா ?
    su.senthilkumaran@gmail.com

    ReplyDelete

சொல்லுங்க திருத்திக்கிறேன்